நீராதாரங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளால் மழைச் சேதங்கள் அதிகரித்தன. மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என்று பல்வேறு கட்டங்களாக பணிகளில் ஈடுபடும் அரசு நிர்வாகம், இத்தகைய ஆக்கிரமிப்புகளைப் பாரபட்சமன்றி அகற்றினால் வருங்காலத்தில் வெள்ளச் சேதங்களைக் குறைக்க முடியும்.
பருவமழைக் காலங்களில் பலத்த மழை பெய்தால் கரைபுரளும் தண்ணீர் வழிந்தோடும் வகையில் முற்காலத்தில் ஓடைகளும், கால்வாய்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் மேடு, பள்ளமுள்ள நிலப்பரப்பில் தண்ணீர் விரைவில் வழிந்தோடி கடலில் கலக்கும். ஆறுகளும் ஆக்கிரமிப்பு இல்லாமல் இருந்ததால் மழைச் சேதங்கள் குறைவு.
ஆனால், அண்மைக்காலமாக-நீராதா ரங்களும், குடியிருப்புப்பகுதி களும், ஆற்றுப்படுகைகளும், கால் வாய் கரைகளும் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், மழை வெள்ளம் வழிந்தோட வழியில்லாமல் ஊருக்குள் புகுந்து விடுகிறது. பெரும்பாலான குளங்கள் நிரப்பப்பட்டு பஸ் நிலையங்களாகவும், குடியிருப்பு களாகவும், வணிக வளாகங்களாவும் காட்சியளிக்கின்றன.
திருமண மண்டபம், வணிகக் கூடங்கள், கடைகள் மற்றும் வீடுகளைக் கட்டியதும் சட்டவிரோதம் என இயற்கை ஆர்வலர்கள் நீண்டகாலமாக குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
இத்தகைய கட்டுமானங்களால் மழைக் காலங்களில் வெள்ளக்காடாகி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வெள்ளம் வழிந்தோடவும் முறையாக கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. தண்ணீர் தேங்கி நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதற்கு ஆக்கிரமிப்புகளே காரணமாக அமைந்துள்ளது. சாலையில் கரைபுரண்ட வெள்ளம் அருகிலுள்ள வயல்வெளிகளுக்குள் வழிந்தோட வழியில்லாமல் பல்வேறு கட்டுமானங்கள் தடுத்தன. இதுபோல நகரைச் சுற்றிலும் வயல்வெளிகளையும், ஓடைகளையும் நிரப்பி கட்டுமானங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது இனிவரும் மழைக் காலங்களில் சேதங்களை அதிகப்படுத்தலாம். ஓடை அமைப்புகள் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தன. ஆனால், இப்போது ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனா ல், பல்வேறு தாழ்வான பகுதிகளும் மழைக் காலத்தில் வெள்ளத்தின் பிடியில் சிக்க நேரிட்டுள்ளது. சாலையோர கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்ந்து, பராமரிக்கப்படாமல் இருப்பதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளால் மழைச் சேதங்கள் அதிகப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்புகள் அதிகமாகும்போது மழைச் சேதங்களும் வருங்காலத்தில் அதிகரிக்கும். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வழிந்தோடும் வகையில் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் வருங்காலத்தில் வெள்ள ஆபத்துகள் குறைய வாய்ப்புள்ளது.
ஒரே நாளில் மாற்றம் கணட பள்ளி ?
ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், தன் மகளை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சேர்த்ததால், கல்வி, உள்ளாட்சி, சுகாதாரம் என, அனைத்து துறை அதிகாரிகளையும் அங்கு முற்றுகையிட வைத்து, ஒரே நாளில் அப்பள்ளி மிகப்பெரிய மாற்றம் கண்டுள்ளது. தற்போது, அப்பள்ளி வளாகம், வகுப்பறைகள் என, எல்லாமும் வழக்கத்தைவிட அதிக சுத்தமாக உள்ளன. மேலும், அங்கு சத்துணவு சமைக்கும் முன், காய்கறிகளை சுத்தம் செய்யவும், பரிமாறும் முன் பணியாளர் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவை, அரசின் கண்காணிப்பு இருந்தால், எல்லாம் சரியாகவே இருக்கும் என்பதையே காட்டுகிறது. அரசு அதிகாரியின் குழந்தையை சேர்த்தால் தான், அரசுப் பள்ளி இத்தனை கவனத்துடன் செயல்படும் எனில், அரசின் அனைத்துப் பள்ளிகளிலும், அரசின் உயர் பதவி வகிப்பவர்களின் குழந்தைகளை சேர்ப்பது நடக்கிற காரியமா? அரசுப் பள்ளி ஆசிரியர்களே கூட, தங்கள் பிள்ளைகளை அங்கு சேர்க்க தயங்கும்போது, எங்கு சேர்த்தாலும் குழந்தைகள் புத்திசாலிகளாக வருவர் என்பதை உணர்ந்து,தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்து, மற்ற பெற்றோருக்கு முன் மாதிரியாக விளங்கும்,ஈரோடு மாவட்ட கலெக்டரை பாராட்டவே வேண்டும். வேண்டிய வசதிகள் அனைத்தும், அரசுப் பள்ளிகளிலேயே கிடைக்குமாறு அரசு செய்தால், பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகளை,கொள்ளைக் கட்டணத்தை செலுத்தி, தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படப் போகிறது? ஆகவே, தொடர் கண்காணிப்பிற்கு அதிகாரிகளை முடுக்கிவிட்டு, அனைத்து பள்ளிகளின் மீதும், அதிக கவனத்தை செலுத்த வேண்டும் அரசு.





0 comments:
Post a Comment