நரேந்திர மோடி அரசுக்கு இந்த அறிக்கை பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
19 வயது கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என்கிற பிரனீஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அகமதாபாத் அருகே குற்றப் பிரிவு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்துக் கூறிய குஜராத் காவல்துறை, இந்த நால்வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல வந்த படையினர் என்றும் தெரிவித்தது.
ஆனால் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரும் அப்பாவிகள் என்றும், இவர்களை போலி என்கவுண்டரில் கொலை செய்துள்ளனர் என்றும் கூறி இஷ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர், பிரனீஷின் தந்தை கோபிநாத் பிள்ளை ஆகியோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையையும் அது நேரடியாக கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரும் கொல்லப்பட்டது நிஜமான என்கவுண்டரிலா அல்லது போலியான சம்பவமா என்பது குறித்து தனது இறுதி அறிக்கையை சமர்பபிக்குமாறு எஸ்ஐடிக்கு நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் அபிலாஷா குமாரி ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று எஸ்ஐடி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.
திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்
அதில் இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று மரணமடையவில்லை. மாறாக அதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டு விட்டார். இது என்கவுண்டர் மரணம் அல்ல, மாறாக கொலையாகும் என்று கூறப்பட்டுள்ளது.
புது வழக்கு தொடர உத்தரவு
இதையடுத்து என்கவுண்டர் சம்பவத்தில் தொடர்பு கொண்ட அத்தனை போலீஸார் மீதும் 302வது செக்ஷன்படி புதிதாக வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையை யார் பதிவு செய்வது, யார் இந்த வழக்கை புலனாய்வு செய்வது என்பது குறித்து உயர்நீதிமன்றம் விவாதித்து முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மத்திய விசாரணை அமைப்பு ஒன்றிடம் ஒப்படைக்குமாறும் குஜராத் அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு சிபிஐ வசம் செல்லும் என்று தெரிகிறது.
எஸ்ஐடியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற விவரங்களை உயர்நீதிமன்றம் வெளியிடவில்லை. அவை வெளியிடப்பட்டால் வழக்கு விசாரணையை அது பாதித்து விடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.





0 comments:
Post a Comment